வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அரசு மிக துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

புதுக்கோட்டை/சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தக் கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்க, அனைத்து தரப்பு மக்களிடையே அமைதியை நிலைநாட்ட, அரசு மிக துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் வி.பி.நாகை மாலி இது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த, மாநிலக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டது.

இந்நிலையில்தான், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தக் கிராமத்தில் தீண்டாமையைஒழிக்க, அனைத்து தரப்பு மக்களிடையே அமைதியை நிலைநாட்ட, இந்த அரசு மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வகையில், இப்போது நியமிக்கப்பட்டிருக்கும், ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு இந்த அரசுஅனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஓர் அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மரபணு சோதனை: இந்நிலையில், வேங்கைவயல், இறையூர், முட்டுக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 11 பேரை மரபணு(டிஎன்ஏ) சோதனைக்கு உட்படுத்த அனுமதி கேட்டு மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு செய்திருந்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், 11 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்துக் கொடுக்குமாறு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏப்.18-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, 11 பேரிடம் இருந்தும் ஏப்.24-ம் தேதி ரத்த மாதிரி சேகரிக்கப்படும் எனத் தெரிகிறது. அதன்பிறகு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் மரபணு பரிசோதனை நடத்தப்படும் என்றும், அதில் இருந்து கிடைக்கும் முடிவுகளையும், ஏற்கெனவே தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தடய அறிவியல் ஆய்வு முடிவையும் வைத்து இறுதி முடிவெடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *