மணல் கடத்தலை தடுத்த விஏஓ படுகொலை… குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு…!

Thoothukudi VAO Murder | குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார். இவர், தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதனால் கடத்தல்காரர்களுடன் விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், விஏஓ லூர்து பிரான்சிஸை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ. பிரான்சிஸ் மிகவும் நேர்மையானவர் என்றும், அவரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.

இந்த நிலையில் ராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது ஏற்கனவே கடந்த 15 தினங்களுக்கு முன்னரே மணல் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்களும் வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *