மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் விவசாயிகள் எச்சரிக்கை

புதுடெல்லி, 
டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றதுடன், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
ஆனால் மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி, அரசுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் விவசாயிகள் துரோக தினம் அனுசரித்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கு மத்திய அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமுடக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், விவசாயிகளின் அயராத முயற்சியால், நாட்டின் விவசாய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விவசாயிகளுடன் விளையாடுவது முழு நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள அந்த அமைப்பு, விரைவாக அவற்றை நிறைவேற்றாவிடில் போராட்டத்தை மீண்டும் தொடர்வோம் எனவும், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *