வங்கி கடன் வாங்கியவர்களுக்கு வட்டி ரத்து.. ரிசர்வ் வங்கி உத்தரவு!

வங்கி கடன் வாங்கியோரிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. ஏனெனில், பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த அபராத வட்டி முறையை தவறாக பயன்படுத்தி வருகின்றன.

வங்கி கடன் வாங்கியவர்கள் கடனை சரிவர செலுத்தவில்லை எனில் அவர்களுக்கு அபராத வட்டி விதிக்கப்பட்டு வருகிறது. கடன் வாங்கியோரிடம் கடனை செலுத்துவதில் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக அபராத வட்டி விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பல்வேறு வங்கிகள் இந்த அபராத வட்டியை தவறாக பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கியிடம் புகார்கள் குவிந்து வந்தன. உதாரணமாக, கடன் வாங்கியோர் சரியாக கடன் செலுத்த வேண்டும் என்பதற்கு மாறாக வங்கிகள் தங்கள் வருவாயை பெருக்குவதற்காக அபராத வட்டி விதித்து வருவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அபராத வட்டி முறையை ரத்து செய்துவிட்டு வெறும் அபராத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என வங்கிகளுக்கான வரைவு சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி, வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி கடனை சரிவர திருப்பி செலுத்தாதவர்களிடம் அபராத வட்டிக்கு பதிலாக அபராத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த அபராத கட்டணமும் வெளிப்படையான முறையில், நியாயமாக வசூலிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், அபராத கட்டணத்துக்கு வட்டி வசூலிக்கக்கூடாது. மேலும், கடனுக்கான அசல் தொகையுடன் சேர்த்து அபராத கட்டணம் வசூலிக்கக்கூடாது. அபராத கட்டணத்தை தனியாக மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *