சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதம்..!!

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அதில் சென்னை உயர்நீதிமன்றம் சாலை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து உடனடியாக அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு நேற்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மீன் விற்பனை கடைகள் மற்றும் உணவகங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் மீன் விற்பனையாளர்களும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமே மீன் உற்பத்தி செய்யவேண்டும் எனவும், சாலையை ஆக்கிரமித்து மீன் விற்பனை செய்யக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் விளக்கமளித்தனர். இருந்த போதிலும் இந்த தொடர் நடவடிக்கை காரணமாக அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *