சென்னையில் பயங்கரம்.. வீட்டு வாசலில் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்ட அதிமுக பிரமுகர்.. 5 பேர் கைது

சென்னை: சென்னை பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா போதையில் வீட்டின் அருகே சுற்றித் திரிந்த நபர்களை தட்டிக்கேட்டதால் கொலை நடந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பெரம்பூர் கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் அதிமுக பெரம்பூர் தொகுதி தெற்கு பகுதி கழகச் செயலாளராக இருந்து வந்தார்.

வீடு அருகே சம்பவம்

திங்கள்கிழமை இரவு கட்சிப் பணிகள் முடிந்து வீட்டின் அருகே இளங்கோவன் சென்று கொண்டிருந்தார். அவரை மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இளங்கோவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

செம்பியம் போலீசார்

இந்த படுகொலை தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதிமுக பிரமுகர் இளங்கோவன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கஞ்சா போதை

இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பது விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அங்கிருந்த தடயங்களையும் சேகரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கஞ்சா போதையில் வீட்டின் அருகே சுற்றித் திரிந்த நபர்களை தட்டிக்கேட்டதால் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.

தனிப்படை அதிரடி

இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க நேற்று இரவே 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ, 5 பட்டாக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *