
புதுடில்லி: ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) GSLV மார்க்-3 (LVM-3) ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை வரும் 23-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளது. இந்த ஏவுகணை மையம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.-3) ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும்.

வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் அக்.22 ம் தேதி அதிகாலை 12.07 மணிக்கு துவங்குகிறது.