
விழுப்புரம்: மரக்காணத்தில் 2013ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் சாட்சியங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட பாமகவினர் 20 பேரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2013 ஏப்ரல் 23ல் வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடந்தது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து வன்னியர்கள் திரளாக பங்கேற்றனர்.பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மகாபலிபுரத்திற்கு பல்வேறு வாகனங்களில் சென்றனர்.அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த சேர்ந்தவர்கள் மரக்காணம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மரக்காணம் பகுதியில் வைத்து சிலருக்கும், மாநாட்டுக்கு சென்றவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இது எல்லை மீறவே கைக்கலப்பு உருவாகி அடிதடியாக மாறியது. கலவரம் ஏற்பட்டது.இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த கலவரம் எல்லை மீறவே அரசு, தனியார் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் பாமகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட 2வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சுதா வழக்கை விசாரித்து வந்தார். இன்று நீதிபதி சுதா தீர்ப்பு வழங்கினார். அதில் அரசு தரப்பில் போதுமான சாட்சியங்கள் அளிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினார்.