எந்த ரேசன் அட்டை? யாருக்கெல்லாம் கிடைக்கும் மாதம் ரூ.1000..? வெளியான தகவல் இதுதான்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியானது. இறுதியாக முக்கிய அறிவிப்பான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் வாசிக்கும் போது, “தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் யாருக்கெல்லாம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

யாருக்கு உரிமை தொகை வழங்கப்படும் :நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், பி.எச்.எச் (PHH) , அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைத்தார்களுக்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 1.14 கோடி அந்தியோதயா அன்ன யோஜனா ரேசன் கார்டுகள் உள்ளன. தொடர்ந்து, முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களின் விவரங்களும் ஒப்பீடு செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உரிமைத் தொகைப் பெற வாய்ப்பில்லாதவர்கள்:

வருமான வரி செலுத்துபவர்கள் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதே போல், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட வாய்ப்பில்லை. மேலும், நான்கு சக்கர சொகுசு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *