10.5 % உள் ஒதுக்கீடு ரத்து.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. முக்குலத்தோர் புலிப்படைக்கு வெற்றி- கருணாஸ்.!

சென்னை: வன்னியர்களுக்கு வழங்கிய 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு உண்மையான சமூகநீதிக்கும் முக்குலத்தோர் புலிப்படைக்கும் கிடைத்த வெற்றி அந்த அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சே. கருணாஸ் கூறியுள்ளதாவது: கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அவசர அவசரமாக வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை எதிர்த்து முக்குலத்தோர் புலிப்படையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கான அரசாணையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23ம் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இன்று 31. 03. 2022 காலை நீதிபதிகள் எல். நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முக்குலத்தோர் புலிப்படை எழுத்துபூர்வமாக எடுத்துரைத்த எழுத்துரை வாதத்தின் படி மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.இதுதான் உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த நீதி! மேலும் இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியதாவது, வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு செல்லும். உள் இட ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும். ஆனால் வன்னியர்களை தனிப் பிரிவாக கருதுவதற்கு எந்த முகாந்திரம் இல்லை. சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு செய்ய முடியாது. இது அரசியல் சட்டம் 14, 15,16 பிரிவின் கீழ் சட்டவிரோதமானது. எனவே கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை தள்ளுபடி செய்யப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தின் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது.” என்று தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. முக்குலத்தோர் புலிப்படை தனித்துவமாக கூறிய வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுகொண்டது முக்குலத்தோர் புலிப்படையினருக்கு கிடைத்த வெற்றி! இவ்வாறு சே. கருணாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *