
பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்திய முஸ்லிம் மாணவிகள் 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிப்ரவரி 23-ம் தேதி வரை கல்வி நிலையங்களுக்கு அருகே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் உடுப்பி, மைசூரு, ஷிமோகா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிக்கமகளூரு, துமக்கூரு, ஷிமோகா ஆகிய இடங்களில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டதற்கு எதிராக மாணவிகள் போராட்டம் நடத்தினர். துமக்கூருவில் உள்ள மகாராணி பெண்கள் பி.யு. கல்லூரிக்கு வெளியே 20க்கும் மேற்பட்ட மாணவிகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகம் விடுத்த எச்சரிக்கையை மீறி போராட்டம் நடத்தியதாக துமக்கூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக 10 முஸ்லிம் மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.