
சென்னையை அடுத்த தாம்பரம் அருகில் உள்ள நாவலூர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மனைவி ஆண்டாள். இவர்களின் மகள் சோமமங்கலத்தில் செயல்பட்டுவரும் ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சமீப காலமாகத் தன் மகளின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அர்ஜூனன், அவள் படிக்கும் பள்ளிக்குச் சென்று மகள் குறித்து விசாரித்துள்ளார்.

விசாரித்ததில் அர்ஜூனனின் மகள் கடந்த ஒரு மாத காலமாகப் பள்ளிக்கே வரவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர் ஆசிரியர்கள். இதனையடுத்து என்ன நடந்தது என்று விசாரித்ததில், அவரின் மகள் பள்ளிக்குச் செல்லாமல், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் ஊர் சுற்றியது தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அர்ஜூனன் அவரின் மகளை சரமாரியாக அடித்துள்ளார். அதோடு, வீட்டிலிருந்து பூச்சி கொல்லி மருந்தை மகளின் வாயில் ஊற்றியுள்ளார்.மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவளை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்த விவகாரம் குறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அர்ஜூனனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.