
புதுடெல்லி: ஒடிசாவில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் அடுத்தடுத்து பெரும் விபத்தில் சிக்கி 300ம் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருப்பது நாட்டையே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த ரெயில் விபத்தை ‘கவாச்’ (கவசம்) என்னும் அதிநவீன தொழில்நுட்ப அமைப்பின் மூலம் தடுத்து இருக்க முடியும் ஆனால் இரயில்வே துறையின் அலட்சியத்தால் இந்த பெரும் துயரம் நடந்திருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ‘கவாச்’ தொழில்நுட்ப அமைப்பு விபத்து நடந்த தடத்தில் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்க அம்சம் ஆகும்.
ஓட்டுனர் தவறினாலோ அல்லது பிற காரணங்களினாலோ நேருகிற ரெயில் விபத்துகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘கவாச்’ தொழில்நுட்ப அமைப்பு. இந்த ‘கவாச்’ தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி முறையில் இயங்குவது ஆகும். இது இந்திய ரெயில்வேக்காக ‘ஆர்.டி.எஸ்.ஓ.’ என்று அழைக்கப்படுகிற ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பு, இந்தியாவின் 3 விற்பனை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.ரெயில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சினை இருந்து வருகிறது.
ரெயிலை இயக்கும் ஓட்டுனர் சிக்னலை தவற விடுகிறபோது, இந்த அமைப்பு அவரை உஷார்படுத்தி விடும். மேலும், 2 ரெயில்கள் அதிவேகமாக வரும்போது தடம் மாறி மற்றொரு ரெயிலுடன் மோதும் வாய்ப்பு ஏற்படுமானால் தன்னிச்சையாகவே ரெயிலின் வேகம் குறைக்கும் தொழில்நுட்பத்தை இந்த ‘கவாச்’ அமைப்பு கொண்டுள்ளது. ரெயிலை ஓட்டுனர் இயக்கி வருகிறபோது, அவர் பிரேக் போடத்தவறினாலும், தானியங்கி முறையில் இது பிரேக் போட்டு ரெயிலின் வேகத்தை குறைக்கும்.
இந்த ‘கவாச்’ தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாட்டை ஏற்கனவே ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் தானே சோதித்துப்பார்த்துள்ளார். அந்த சோதனை வெற்றி கண்டிருக்கிறது. இது குறித்து அப்போது அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், கவாச் (லிட். ‘ஆர்மர்’) என்பது இந்திய இரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பாகும். கவாச்சின் ஆரம்ப வளர்ச்சி 2012 இல் ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) என்ற பெயரில் தொடங்கியது.