
மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழாவையொட்டி நேற்று 24/02/23 தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், வெயிலில் மயங்கி விழுந்து ஒருவரும் பலியாகினர். இதில் வேலூர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் விநாயகம்(வயது 60). இவர் தேரோட்டத்தை காண்பதற்காக மேல்மலையனூருக்கு வந்தார். தேரை வடம்பிடித்து இழுத்தபோது பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக்கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய விநாயகம், கீழே விழுந்தார். இதை கவனிக்காத பக்தர்கள், அவரை மிதித்து சென்றனர். இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.இதேபோல் தேரோட்டத்தின்போது வெயில் சுட்டெரித்ததால் மேல்மலையனூர் அருகே உள்ள கோடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(52) என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவர்கள் 2 பேரது உடலையும் வளத்தி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.