
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது.கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.” என்று அறிவுறுத்தி இருக்கிறார்.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அயராது தமது பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது நிலையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து இருக்கிறார். அவர் விரைவில் பூரண நலம்பெற்று தனது மக்கள் நலப்பணிகளை தொடர வேண்டுமென விழைகிறேன்.” என்று பதிவிட்டு உள்ளார்.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட செய்தி வருத்தம் அளிக்கிறது. எல்லாம் வல்ல கந்தனின் ஆசியால் அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலம்பெற வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்றின் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், “மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள ட்விட்டரில் பதிவில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” என்று தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.