
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவனும், அவரைக்காப்பாற்ற சென்ற மனைவி, குழந்தையும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம்(34)கொத்தனார். இவர் நேற்று தனது மாடிவீட்டில் பழுதடைந்த மின்சார ஸ்விட்சை சரி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிவாச ரத்தினத்தை மின்சாரம் தாக்கி உள்ளது. அதனைக் கண்ட அவரது மனைவி ஹேமா (28)இடுப்பில் தனது ஒரு வயது மகள் நிஹன்யாவை தூக்கிக்கொண்டு கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன், மனைவி மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.