
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தினால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க தயார் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். இதே போன்று பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில் உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இறங்கியுள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தரம்வீர்சவுத்ரி கூறியதாவது: மாயாவதியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால், அவர்களுடன் கூட்டணி அமைக்க தயார். எதிர்க்கட்சிகள் மரியாதைக்குரிய வகையில் எங்கள் கட்சியை அணுகி, அவர்களின் செயல்திட்டங்களை எங்கள் தலைவரிடம் (மாயாவதி) தெரிவித்தால், கூட்டணி வைப்பது குறித்து அவர் இறுதி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.மேலும்,அகிலேஷ் யாதவுடன் கூட்டணிக்கான சாத்தியம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‛அகிலேஷ் யாதவை விட மாயாவதி மிகப் பெரிய தலைவர். உத்தரபிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்துள்ளார். அகிலேஷ் ஒரு முறை மட்டுமே பதவி வகித்துள்ளார். மாயாவதி பெரிய மனப்பான்மை கொண்டவர், மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பவர். திறந்த மனதுடன் அகிலேஷ், மாயாவதியை தலைவராக ஏற்றுக்கொண்டால், அவரை நாங்கள் வரவேற்போம்’ என்றும் தேசிய செய்தி தொடர்பாளர் தரம்வீர்சவுத்ரி தெரிவித்துள்ளார்.