மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்துக்கு கொடுக்கக் கூடாது! மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் எச்சரிக்கை.!

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர். அதில், சென்னை, திருவான்மியூர் கடற்கரை சாலையிலுள்ள ஒரு மருந்து கடையில் வலிநிவாரணி மருந்துகள் பெருமளவில் வாங்கி, உரிய விற்பனை ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து புலனாய்வு பிரிவு, மருந்துகள் ஆய்வாளரால் அந்த மருந்துக்கடைக்கு வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதனைப் பொருட்கள் சட்டத்தின்கீழ் அக்கடையின்மீது சட்ட நடவடிக்கையும் துவக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அம்மருந்துக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *