
இலங்கையில் ஆர்ப்பாட்டம் மேலும் வலுத்துக்கொண்டு வருகிறது.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி அதிபர் மாளிகை நேற்று முற்றுகையிடப்பட்டது. இதுவரை இல்லாத அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 1948-ல் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு அந்நாடு முதல் முறையாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொவி-19 பெருந்தொற்றுக்கு பிறகு இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததால் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளன.இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று கொழும்பு நகரில் அதிபர் செயலகத்துக்கு எதிரில் உள்ள காலிமுகத் திடலில் மிகப்பெரிய போராட்டத்துக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனால் நேற்று காலையில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டக்காரர்கள் தங்களது வாகனங்கள் மூலமும் பேருந்துகள், ரயில் மூலமாகவும் இந்தப் பகுதியில் குவியத் தொடங்கினர்.