
காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிமலை கிராமத்தில் மேல்பாடி ஊராட்சியின் கிராம சபா கூட்டம் ஊராட்சி தலைவர் நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசினார். அவரிடம் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என திமுக சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என அன்புமணி கூறியிருந்தாரே அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில், பாமக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் பூரண மதுவிலக்கை அறிவித்துக் கொள்ளட்டும்.

வழக்குகள் உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும் என்பது திமுகவின் நீண்ட நாள் கொள்கை. இப்போது தான் பிரதமர் சொல்லியுள்ளார். அதனை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்.இலங்கை தமிழர்கள் உண்ண உணவின்றி உடையின்றி தவித்து அங்கிருந்து தப்பி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு எப்போதும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை. தமிழக அனைத்து கட்சிகளும் இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டுமென கூறியும் மௌனம் காக்கிறது.ஆனால் வட இந்தியனுக்கு பாதிப்பு என்றால் இவ்வாறு இருந்திருப்பார்களா. 6 தடுப்பணைகள் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும். புதியதாக 2 மணல்குவாரி துவங்க சுற்றுசூழல் அனுமதி கோரியுள்ளோம் என்றார். லாரி உரிமையாளர்களுக்கு மணல் குவாரி மணல் எடுக்க அனுமதி மறுக்கபடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவில்லை என்றாலும் நேரில் சென்று பணம் கட்டி லாரியில் மணல் வாங்கி கொள்ளலாம். நீர் வளத்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளன. அதனை நிரப்ப நிதி பற்றாக்குறை உள்ளதால் நிதி கோரியுள்ளோம் என்றார் துரைமுருகன்.