
கிருஷ்ணகிரி: திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கிருஷ்ணகிரி மாவட்டம் புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி குறவர் இனத்தவர்கள் 4 பெண்கள், 2 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரை கடந்த 11-ம் தேதி இரவு ஆந்திர காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அந்த 10 பேரின் குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தமிழக காவல்துறை அதிகாரிகள் விசாரணையில், 10 பேரும் சித்தூர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் கிருஷ்ணகிரிக்கு மீட்டு வரப்பட்டனர்.
சித்தூர் காவல் நிலைய காவல்துறையினர் தங்களது உடலில் மிளகாய் பொடி தூவி, கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட டி.எஸ்.பி. சம்பந்தப்பட்ட 10 பேரிடம் விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில் சித்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் இருவர் மீது ஆந்திர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.