
சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, பள்ளியின் தாளாளரை கைதுசெய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறுவனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.