
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் இந்திர மேக்வல். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இந்திர மேக்வல் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். இதனிடையே, இந்திர மேக்வல் கடந்த மாதம் 20-ம் தேதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீர் குடிக்க எடுத்துள்ளார். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில்சிங் (வயது 40) மாணவன் இந்திர மேக்வலை கடுமையாக தாக்கியுள்ளார். பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடிநீர் பானையை தொட்ட மாணவன் மீது ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார். ஆசிரியர் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மேக்வல் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மாவட்ட மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக உதய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவன் மேக்வலுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் இந்திர மேக்வல் நேற்று 13/08/22ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷாயில்சிங் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.