
சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றவில்லை என தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:- தென்காசி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றவில்லை. சீமைக் கருவேல மரங்களை தொடர்ந்து அகற்றப்பட்டால் தான் மீண்டும் வளராமல் தடுக்க முடியும். மரங்களை அகற்ற குழுக்கள் அமைக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
இதற்கு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உரிய குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, குழுக்கள் அமைத்தது குறித்து ஜூலை 5ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.