
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பகுஜன் சமாத் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஸ் மிஸ்ரா, கட்சியின் ஒரே எம்எல்ஏவான உமா சங்கர் சிங் ஆகியோர் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு நடைபெற்றதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தான் குடியரசு தலைவராக விரும்புகிறேன் என சமாஜ்வாதி கட்சி வதந்திகளை பரப்பிவருவதாக குற்றம்சாட்டினார்.இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “நான் மீண்டும் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகவே விரும்புகிறேன். இன்னும் கேட்டால் பிரதமராக ஆசை படுகிறேன். சுகமான வாழ்க்கை வாழ விருப்பம் இல்லை. போராட்ட வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்” என்றார்.மாயாவதியை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் நேற்று கடுமையாக சாடி பேசினார். “சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மைன்புரியில் பாஜகவுக்கு வாக்குகள் செல்ல மாயாவதி உதவினார். நன்றி கடனாக அவரை பாஜக குடியரசு தலைவராக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மாயாவதி, “உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வருவதற்காக என்னை குடியரசு தலைவராக்கும் கனவை சமாஜ்வாதி கட்சி மறந்துவிட வேண்டும். நான் குடியரசு தலைவராக வேண்டும் என்று கனவு காணமாட்டேன்.ஏனென்றால் நான் நிம்மதியான வாழ்க்கையை விரும்பவில்லை, ஆனால் போராட்ட வாழ்வை விரும்புகிறேன். நான் மீண்டும் உத்தரபிரதேச முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறேன்” என்றார்.சதீஸ் மிஸ்ரா யோகி ஆதித்யநாத்தை சந்தித்து குறித்து விளக்கம் அளித்துள்ள மாயாவதி, “எங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்கள் சமாஜ்வாதி மற்றும் பாஜக அரசுகளால் புறக்கணிக்கப்பட்டன. இது குறித்து மாநில அரசின் கவனத்தை ஈர்க்க, மிஸ்ரா தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதிநிதிகள் யோகியை சந்திக்கச் சென்றனர்” என்றார்.