நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ள 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.!

நாகை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 670 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இதன் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.ஆனால், நாகை மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் அடித்தே வருகிறது. கடந்த ஒன்பதாம் தேதி குறைந்த தாழ்வு நிலை உருவாக்கக் கூடும் என்பதால் 7 ஆம் தேதியே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத் துறையினர் அறிவித்திருந்தனர், அதற்கு முன்பாகவே நான்கு நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக இருந்த காரணத்தால் கடலுக்குச் செல்லாத விசைப்படகு மீனவர்கள் இன்று 19-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமத்தைச் சேர்ந்த 700 விசைப் படகுகளும் 3000-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன் வரத்து இல்லாத காரணத்தால் நாகை மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *