
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி என்பவர் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை. குறிப்பாக சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் வேலை பார்க்கக்கூடிய சுமார் 1,500 தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய தினக்கூலி ரூ.424-ஐ உயர்த்தி வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க குழு அமைத்து முடிவு செய்யும்வரை குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரத்து 401-ஐ வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், அந்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில், ஊதியம் தொடர்பாக குழு அமைத்ததற்கு அவகாசம் கேட்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரை இடைக்காலமாக தினக்கூலியை ரூ.424-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.