
நீலகிரி: முதுமலையில் தாயை பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
இந்த படத்தினை கார்த்திகி கோன்சல்வாஸ் இயக்கி இருந்தார். இந்த படம் ஆஸ்கர் விருது இறுதி போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 13-ந்தேதி அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதினை தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் பெற்றது. இந்த விருதினை பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகில் முதல் விருது பெற்ற ஆவண திரைப்படம் என்ற சாதனையும் இந்த படம் படைத்தது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர்.
அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். தமிழக முதலமைச்சர் பொம்மன், பெள்ளி ஆகியோரை சில தினங்களுக்கு முன்பு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து பாராட்டு கேடயமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். இந்த நிலையில் நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது.இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர். நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.
விழா முடிந்ததும் அவர்கள் நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மும்பையில் இருந்து அவர்கள் கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்தனர். இந்த நிலையில் பொம்மன், பெள்ளி ஆகியோர் இந்த விமானத்தில் வருவது, விமானிக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் எழுந்து வந்து, உள்ளே இருந்த பயணிகளை பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கூறினார். தொடர்ந்து விமானி பேசுகையில், நம்முடன் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் கலைஞர்கள் 2 பேர் பயணிக்கிறார்கள். அவர்களுடன் பயணிப்பது நமக்கு பெருமையான தருணம். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது பொம்மனும், பெள்ளியும் விமானத்தின் முதல் இருக்கையில் இருந்து எழுந்தனர். உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி 2 பேரையும் உற்சாகமாக வரவேற்றனர்.
இதை பார்த்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பதிலுக்கு அவர்களுக்கு கை கூப்பி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.அப்போது விமானி, இவர்கள் நடிகர்கள் அல்ல. உண்மையான மனிதர்கள். நிஜ ஹீரோக்கள். இவர்களுடன் பயணிப்பதை பெருமையாக உணர்கிறோம் என தெரிவித்தார். இந்நிலையில் பாகன் தம்பதியர் விமான பயணிகள் கொடுத்த வரவேற்பில் மகிழ்ச்சி அடைந்து திகைத்து நின்றனர்.