
மேல்பாதி: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அறநிலையத்துக்கு சொந்தமான அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் கரணமாக, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல முடியாக நிலை எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில் கோயிலுக்கு வருவாய் கோட்டாசியர் சீல் வைத்துள்ளார்.

கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேல்பாதி கிராமத்தை சேர்ந்த இரு சமூகத்தினரும் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். மேலும், இரு சமூகத்தினரும் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் எழுத்துப்பூர்வ விளக்கங்களை அளிக்கலாம்.
இரு சமூகத்தினரின் விளக்கங்களை பெற்ற பிறகு விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.பழனி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.