திருச்சியில் பரபரப்பு என்ஜினீயரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற வடமாநில தொழிலாளர்கள்.!

திருச்சி: மரம் அறுக்கும் ஆலை திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் திருச்சி சஞ்சீவி நகரில் வசித்து வரும் குஜராத்தை சேர்ந்த திரேந்தர் (வயது 42) என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அந்த தொழிலாளர்கள் அங்கேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் திரேந்தர் ஆலையில் உள்ள அலுவலக அறையில் பணியில் இருந்தார். அப்போது, அறைக்குள் வந்த வாலிபர் ஒருவர் திரேந்தரின் செல்போனை எடுத்துக் கொண்டு ஓட முயன்றார். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை பிடித்து செல்போனை வாங்கிக்கொண்டு விரட்டி அடித்தனர். அதன் பின்னர் இரவு 7.30 மணி அளவில் திரேந்தர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் மீண்டும் அந்த வாலிபர் மீண்டும் மரம் அறுக்கும் ஆலையின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்ததாகவும். இதைபார்த்த அசாம் மாநில வாலிபர்கள் 4 பேர் அந்த வாலிபர் திருட வந்ததாக நினைத்து, அவரை பிடித்து கயிற்றால் ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின்னர் அந்த வாலிபரை மரத்தில் கட்டியவாறு வைத்துவிட்டு 4 பேரும் தூங்க சென்றுவிட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மரத்தில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அங்கிருந்த காவலாளி இதுகுறித்து ஆலை உரிமையாளர் திரேந்தருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் அங்கு வந்த அவர் மணிகண்டம் காவல்துறையினரிடம் புகார் செய்தார். அதன் பேரில் திருவெறும்பூர் துணை காவல்துறை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் காவல்துறை சம்பவத்திற்கு வந்து பார்த்தபோது வாலிபர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்தவர் திருச்சி துவாக்குடிதெற்கு வாண்டையார் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சக்கரவர்த்தி (33) என்றும், என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி என்ற மனைவியும், 6 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். மேலும் சக்கரவர்த்தி மது பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்த சக்கரவர்த்தி மனம் நலம் பாதிக்கப்பட்டவர் போல தனியாக பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *