சென்னை IIT-ல் தொடரும் மரணங்கள்.. கடந்த 3 மாதத்தில் 4 மாணவர்கள் தற்கொலை: காவல்துறையினர் விசாரணை!

சென்னை: ஐஐடியில் படித்துவந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷோக்லே கேதார் சுரேஷ். 21 வயதான இவர் சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடன் தங்கியிருந்த மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மாணவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. தனது சொந்த ஊரில் இளம்பெண் ஒருவருடன் மாணவர் காதலில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதல் முறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் இது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறது என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் ஐ.ஐ.டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *