
சென்னை: சென்னைக்கு அருகே வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் கிராமப் பகுதிக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.சென்னை வனத்துறையினருக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து, நெடுங்குன்றம் பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் சுமார் 7 அடி நீளமுள்ள முதலையை பாதுகாப்பாக பிடித்தனர். இந்த முதலையை பிடிக்க இரண்டு மணி நேரமானதாகவும், இது எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதை உறுதியாக தற்போதைக்கு சொல்ல இயலாது என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.இப்பகுதியில் கடந்த 6 மாதங்களில் நடைபெறும் மூன்றாவது சம்பவம் இதுவாகும். இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் ஒரு குட்டி முதலை உள்பட இரண்டு முதலைகள் பிடிபட்டுள்ளன.தற்போது பிடிபட்ட மூன்றாவது முதலையுடன் சேர்த்து அனைத்து முதலைகளும் கிண்டியில் உள்ள தேசியப் பூங்காவில் விடப்பட்டுள்ளன.நெடுங்குன்றத்தில் உள்ள ஏரிகளில் முதலைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுவது வழக்கம். அந்த கூற்று தற்போது உண்மையாகியுள்ளது. ஆனால் தற்போதுதான் இதுபோன்று பொதுமக்கள் வாழும் பகுதிகளில் முதலைகள் நுழைகின்றன என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.