
செஞ்சி: செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள காப்பு காட்டில் இருந்து புள்ளி மான் ஒன்று தினமும் பகல் நேரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு வந்து மேய்ந்து விட்டு இரவு காட்டுக்குள் சென்று விடுவது வழக்கம். பகல் நேரங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் வரும்போது அங்கே வரும் சிறுவர், சிறுமியர்களுடன் பொது மக்கள் அந்த மானுக்கு உணவளித்து அதன் உடன் விளையாடி மகிழ்ந்து வந்தனர் . மேலும் அவர்கள் கொடுக்கும் புல் உள்ளிட்ட உணவுகளையும் உண்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அந்த மான் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்துக்கு வந்தது. ஆனால் மானின் தலையில் இருந்த 2 கொம்புகளை காணாமல் பொதுமக்களும், அலுவலக ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சிலர் அருகில் சென்று பார்த்தபோது அதன் இரு கொம்புகளையும் யாரோ மர்ம நபர்கள் அறுத்து எடுத்து சென்றது தெரியவந்தது . அருகில் கால்நடை மருத்துவமனை உள்ளதால் சமூக ஆர்வலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் பொது மக்கள் அந்த மானுக்கு சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மான் கொம்புகளை அறுத்து சென்ற மர்ம நபர் குறித்து செஞ்சி வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.