சீர்காழி அருகே டீசலுடன் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் காயம்..!!

சீர்காழி அருகே பூங்குடி கிராமத்தில் 6 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. ஓட்டுநர் சிறு காயத்துடன் தப்பிய நிலையில் ஆபத்தை உணராமல் டீசலை போட்டிப்போட்டுப் பிடித்துச் சென்றனர் கிராம மக்கள்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிக்கு தனியார் டீசல் விற்பனை நிலையத்திலிருந்து டேங்கர் லாரி மூலம் டீசல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 6,000 லிட்டர் டீசலுடன் சென்ற டேங்கர் லாரி பூங்குடி கிராமத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி அருகே இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இவ்விபத்தில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் லாரியை மீட்கும் போது டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை ஆபத்தை உணராமல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாட்டில்கள், கேன்கள், வாலிகளில் போட்டிப்போட்டு பிடித்துச் சென்றனர். போலீசார் அவர்களை எச்சரித்த போதும் அதனைப் பொருட்படுத்தாமல் கிடைக்கும் பாட்டில்களில் எல்லாம் டீசலை பிடித்துச் சென்றனர். பின்னர் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்க க்ரேன் வரவழைக்கப்பட்டது. இந்த விபத்தால் மின்கம்பி அறுந்ததால் அப்பகுதியில் 4 மணி நேரத்துக்கு மேல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *