
கோவை: குனியமுத்தூர் பகுதியில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. அங்கு மாணவ மாணவியர் தங்கிப் படிக்க ஏதுவாக விடுதி வசதி உள்ளது. விடுதியைச் சுற்றி மாணவியருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த 5 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் தரமற்ற நிலையில் இருந்துள்ளது.
இதனை பொருட்படுத்தாமல் கல்லூரி நிர்வாகம் தரமற்ற சுவரை ஒட்டி 5 அடி உயரத்தில் கற்களால் ஆன சுவர் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 04/07/23ல் மாலை வழக்கம்போல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராத நிலையில் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆறு பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்படு சிகிச்சை பெற்று வந்த பருண் கோஸ் என்பவரும் உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து, கட்டுமான நிறுவன உரிமையாளர் கட்டுமானப் பொறியாளர், கட்டுமான மேற்பார்வையாளர் என 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்து தொடர்பில் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியதாக கோவை மாநகர மேயர் கல்பனா குற்றம் சாட்டியிருக்கிறார்.