
உலக அளவில் குறைந்தது 50 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்திருப்பதாக `லான்செட் சைல்டு அண்ட் அடலசன்ட் ஹெல்த்’ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரு மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நகரங்களில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.இந்தியாவில் 19.17 லட்சம் குழந்தைகள் பெற்றோரை அல்லது பராமரிப்பாளரை இழந்துள்ளனர். இதில் 10 – 17 வயதுப் பிரிவில், 49 சதவிகிதம் பேர் தங்களின் தந்தையையும், 15 சதவிகிதம் பேர் தாயையும் இழந்துள்ளனர்.உலக அளவில், கோவிட் நோயால் பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளில் இரண்டு பேர், 10 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினர் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. கோவிட் இறப்புகள் பெரும்பாலும் ஆண்களைப் பாதிப்பதால் நான்கில் மூன்று குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்துள்ளனர். கொரோனா தொற்றின் முதல் 14 மாதங்களை ஒப்பிடுகையில், 2021 ஆண்டில் மே 1 முதல் அக்டோபர் 31 வரை உள்ள ஆறு மாதங்களில் பெற்றோரையோ அல்லது பராமரிப்பாளரையோ இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது.2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஆய்வில் 15 லட்சம் குழந்தைகள் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாலவரை இழந்தனர் என ஆய்வு தெரிவித்தது.

ஆனால், தற்போது வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் கொரோனாவால் ஏற்பட்ட மறைமுக மரணங்களையும் சேர்த்துக் கணக்கிட்டதில், 27 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.“50 லட்சம் குழந்தைகள், ஹெச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தங்கள் பெற்றோரை இழக்க கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால், இரண்டு வருடங்களில் அதே எண்ணிக்கையிலான குழந்தைகள் கோவிட்-19-ல் ஆதரவற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் வேரியன்ட் இறப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். இந்தக் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்கள் வளர்வதற்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்” என லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் மற்றும் பேராசிரியரான லோரெய்ன் ஷெர் கூறியுள்ளார்.