கிராமங்களை குறிவைத்து ரூ.4 கோடி மோசடி; தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த மக்கள்.!

தருமபுரி: கம்பைநல்லூர் அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அன்றாட கூலி வேலை, தள்ளுவண்டி கடைகளில் பானி பூரி, பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் அப்பகுதியை சேர்ந்த கிராம பலர் சீட்டு போட்டிருந்தனர்.ஆரம்பத்தில் சீட்டு பணத்தை வெங்கடாசலம் முறையாக திருப்பி அளித்ததாக தெரிகிறது. இதனால், அவர் மீது நம்பிக்கை வளர அருகே இருந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பலரும் அவரிடம் சீட்டு கட்டியுள்ளனர். வெங்கடாஜலம் தனது மனைவிக்கு கேன்சர் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாக கூறி தன்னிடம் சீட்டு கட்டிய மக்களிடம் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என பலரிடம் பணம் பெற்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக வெங்கடாஜலம் குடும்பத்தினருடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை செல்போன் மூலம் தொடர்ப்பு கொள்ள முயன்று தோல்வியுற்ற மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் வெங்கடாஜலம் மீது நடவடிக்கை எடுத்து பணம் மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் 20க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *