
திருச்சி: இந்திய முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது அதில் பலர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி வரும் போலியான ஏஜன்டுகள் வெளிநாட்டு செல்பவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இந்தியர்களை விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சையதுஇப்ராகிம் (வயது 28). கம்போடியா நாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கோலாம்பூரில் இருந்து வந்த விமானத்தில் நேற்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் கம்போடியாவில் தமிழகத்தை சேர்ந்த 400ம் மேற்பட்டோர் உணவின்றி சிக்கி தவித்து வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது; நான் வணிக விசாவில் கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து கம்போடியா சென்றேன். என்னை திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் அங்கு அனுப்பி வைத்தனர். கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்னை 4 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்தார். அங்கு எனக்கு உரிய வேலை ஏதும் கொடுக்கவில்லை. ஆயிரம் டாலர் சம்பளம் கொடுப்பேன் என்று கூறிவிட்டு, சம்பளம் கொடுக்காமல் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தினர். ஏதேனும் உதவி தேவை என்று கேட்டால் கண்டுகொள்ளாமல் உள்ளனர். நான் முதலில் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கு தகவல் தெரிவித்தேன். பல்வேறு முயற்சிகளுக்கு இடையே எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் உதவியுடன் திருச்சி வந்து சேர்ந்தேன். தமிழகத்தை சேர்ந்த இன்னும் 400-க்கும் மேற்பட்டோர் கம்போடியாவில் சிக்கி தவித்து வருகின்றனர். அங்கு அவர்கள் சொல்லும் சமூக விரோத வேலையை செய்யவில்லை என்றால் அடிப்பது, உணவை கொடுக்காமல் விடுவது, மின்சாரத்தை உடலில் பாய்ச்சுவது போன்ற கொடுமைகளை செய்கின்றனர். அதற்கான வீடியோ என்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டுகின்றனர். இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச பயப்படுகிறார்கள். இப்போது தான் மீட்பதற்கு முயற்சி செய்கின்றனர். கம்போடியாவில் உணவின்றி தவிக்கும் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.

மேலும் இந்த செய்தியின் மூலம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பகுஜன் குரல் சார்பில் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் இது மட்டும் இன்றி இந்திய முழுவதும் செயல் படும் போலியான ஏஜன்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் குரல் இணையதள செய்தி மூலம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை.