கஞ்சா வேட்டை 2.0 காரில் ரகசிய அறையில் 70 கிலோ கஞ்சா கடத்தல் – சென்னையில் மூவர் கைது!

சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று காலை யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி போலீசார் சோதனை செய்த போது, காரில் எதுமில்லை என்றபோதிலும் கஞ்சா வாடை அடித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் போலீசார் தீவிரமாக தேடிய போது நூதன முறையில் காரில் ரகசிய அறை ஒன்றை உருவாக்கி, அதில் பிளாஸ்டிக் கவரில் அவர்கள் கஞ்சாவை மறைத்து கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்குமார், ஸ்டான்லி மற்றும் ஆந்திராவை சேர்ந்த சீனி என்பது தெரியவந்தது. முக்கிய நபரான மோகன் குமார் கடந்த 1 வருடங்களாக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி சாலை மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, அதன் பின்னர் ரயில் மூலமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதே போல நேற்று ராஜமுந்திரி பகுதியிலிருந்து புரோக்கரான சீனி மூலமாக கஞ்சா வாங்கி கொண்டு மோகன் குமார், சீனி, ஸ்டான்லி ஆகியோர் காரில் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அதன் பின்பு ரயிலில் பார்சல் மூலமாக கஞ்சா அனுப்புவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காரில் வரும் போது போலீசாரிடம் சிக்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 70கிலோ கஞ்சாவை 2 லட்ச ரூபாய்க்கு ஆந்திராவில் வாங்கியதாகவும், அதை 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்வோம் என்றும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.கஞ்சா வேட்டை 1.0 வில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ததாகவும்,தற்போது கஞ்சா வேட்டை 2.0வில் கஞ்சா நேரடி விற்பனையாளரை கைது செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *