
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன்ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆகவும் 900 மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக இரயில்வே துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் – சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவுரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டது.
அதில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.
மேலும் பாலசோரில் ரயில்கள் மோதி விபத்துக்குளான பகுதியில், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் , ஒடிசா முதல்வர் பட்நாயக் இருவரும் மீட்பு பணி குறித்து ஆலோசித்தனர்.