
சென்னை: எதற்கும் அஞ்சும் இயக்கமல்ல அதிமுக. வழக்குகள் போட்டு மிரட்டலாம் என நினைக்கிறார்கள் திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்.சென்னையில் கடந்த 19ம் தேதி நடந்து தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் போது, சென்னை ராயபுரம் பகுதியில் திமுகவினர் கள்ளஓட்டுப் போடுவதாக அதிமுகவினர் புகாரளித்தனர்.

இதனால் கள்ள ஓட்டுப் போட முயன்ற திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி அதிமுக-வினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதியப்பட்டது.நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயன்றாக புகார் எழுந்ததையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அ.தி.மு.க-வினர் அங்கிருந்த தி.மு.க பிரமுகர் நரேஷை தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் ஜெயக்குமார் லைவாக காட்டியதால், வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் நரேஷ் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 21ஆம் தேதி கைதாகி மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், ஜாமீன் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.அந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயக்குமார் மீதான வழக்கில் கொலை முயற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திமுக பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் கொடுத்த புகாரில், ”அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவை எனது சகோதரர் நவீன்குமார் திருமணம் செய்துள்ளார். நான், மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலையை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் நடத்தி வந்தேன். என்னுடன் நவீனும் சேர்ந்து தொழில் செய்து வந்தார். தொழில் தொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, தொழிற்சாலையை ஜெயக்குமார் அபகரித்துக் கொண்டார்” என புகார் கொடுத்துள்ளார்.இந்த வழக்கில் ஜெயக்குமார், நவீன், ஜெயப்பிரியா மீதும் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், எதற்கும் அஞ்சும் இயக்கமல்ல அதிமுக. வழக்குகள் போட்டு மிரட்டலாம் என நினைக்கிறார்கள் திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.