
2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ரஸியா பேகமும் ஒருவர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ரஸியா பேகம், 16 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவனை இழந்தவர். இவர் தன் இரண்டு மகன்களுடன் தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வருகிறார்.
கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கின் போது அண்டை மாநிலமான ஆந்திராவின் நெல்லூரில் சிக்கித் தவித்த தன் மகனை மீட்க, 1,400 கிலோ மீட்டர் ஒற்றை பெண்ணாக காவல்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் மூன்று நாள்கள் பயணித்து, தன் மகனை அழைத்து வந்தார். அதனால், அவர் அந்த நேரத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது அவரின் 19 வயது மகன் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கியிருக்கிறார். கிழக்கு ஐரோப்பியத் தேசத்தின் ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது சுமி. அங்கிருக்கும் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் ரஸியா பேகத்தின் மகன் நிஜாமுதீன் அமான்.
நாளுக்கு நாள் போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் சூழலில், தன் மகனும் மற்ற இந்திய மாணவர்களும் பத்திரமாக நாடு திரும்பி வர வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாகக் கூறுகிறார் ரஸியா பேகம்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சுமியில் மருத்துவம் பயிலும் என் மகன் மற்றும் பிற இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும். இந்திய அரசு அதற்குரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். என் மகன் நிஜாமுதீன் அமானும் இன்னும் சில மாணவர்களும் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கிறார்கள். என் மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார்.

தான் நலமாக இருப்பதாகவும், அவரை பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார். ஆனாலும், பதற்றமாக உள்ளது. என் மகன் உட்பட இந்திய மாணவர்களை மீட்டுத்தர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.