
உலக சதுரங்க சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா.அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ சதுரங்கப் போட்டி இணையம் வழி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் 39வது நகர்த்தலின்போது அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் பிரக்ஞானந்தா திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.“தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்,” என முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.பிரக்ஞானந்தாவின் வெற்றி ஒரு மாயாஜாலம்போல் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.