
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா 67 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை விட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திருமகன் ஈவேரா சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றம் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்தபோது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவித்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜனவரி 31 ஆம் தேதி வேட்பு மனு தாக்கலும், அடுத்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்கு பதிவும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் அந்தத் தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் இன்று முதல் பின்பற்றப்பட்டு வருகிறது அதனால் அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் புகைப்படம் மற்றும் பல்வேறு இடங்களில் கட்சி கொடி அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படங்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தற்காலிகமாக அகற்றப்பட்டு வருகிறது.