ஈரான் ஹிஜாப் போராட்டத்தின் போது பெண்களின் மார்பகம், பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று பிரிட்டிஷ் ஊடகமான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது..!

ஈரான்: ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள், பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து, அதாவது 1979 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி அங்கு 9 வயது முதல் அனைத்து பெண்களும் பொது இடங்களில் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும். அப்படி ஹிஜாப் அணியவில்லை என்றால் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்க ஈரான் அரசு தனியாக கலாச்சார காவலர்களையும் நியமித்தது. அப்படித்தான் கடந்த செப்டம்பர் மாதம் குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயதுடைய இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்றுக் கூறி அவரை காவலர்கள் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாஷா அமினியின் மரணம் ஈரான் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஹிஜாப் சட்டங்களை நீக்கக் கோரி ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செப்.16ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கிப் பல உலக பிரபலங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் உலக அளவில் இது கவனத்தை ஈர்த்தது. ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தி வருகின்றன. இருப்பினும் ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள் மற்றும் பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக பிரிட்டிஷ் ஊடகமான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ள ‘தி கார்டியன்’, ”20 வயதான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அப்பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து துப்பாக்கிக்குண்டின் இரு துகள்களை அகற்றினோம். தொடைப் பகுதியில் இருந்து 10 துகள்களை அகற்றினோம்” என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *