
சென்னை: தமிழகத்தில் இனி கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற வசதிகளை பெறலாம் என நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கட்டடம் கட்டுமானம் முடிந்த பிறகே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை பெற முடியும். இந்த நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில், ‛நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டட விதிகள் 2019, விதி எண் 20ன் படி கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்று இன்றி மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி உள்ளிட்ட முதலான இணைப்புகளை வழங்கலாம்’ என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், இனி கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதற்கு முன்னதாகவே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை பெறலாம். அதேநேரத்தில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் (8070 சதுர அடி) பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும், இதுபோன்று அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த வசதியை வழங்கலாம்.