ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 – 350 பேர் கைது

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கஞ்சா சோதனையை அடுத்து 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை போதை பொருள் விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ’ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற பெயரில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தொடர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். மேலும், கடத்தல், பதுக்கல், விற்பனை ஆகிய சங்கிலி தொடரை உடைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், போதை பொருள் விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ரயில்வே போலீசாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கைப்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.மேலும், போதை பொருள் விற்பவர்கள், பின்னணியில் இருப்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பை, காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறிய டிஜிபி, கண்காணிப்பு பணிகளை, மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.இதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *