அலட்சியம் வேண்டாம்..கொரோனா 4வது அலையை தடுக்க “இது” கட்டாயம்..அறிவுறுத்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர் எனவும்,. தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் தூத்துக்குடி வந்தார்.

அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய் அவர், “தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு 100க்கும் குறைவாக உள்ளது என்றார்.

மேலும், தமிழக அரசின் நடவடிக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் மருத்துவ கட்டமைப்புகள் காரணமாக கொரோனா காரணமாக இறப்பு பூஜ்ஜியம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா 4வது அலை தீவிரமாக பரவி வருகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி இறப்பு 59 பேர் என உள்ளது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஏற்படும் என கான்பூர் ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.

எனவே தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். தமிழ் வழிக்கல்விக்கு தி.மு.க அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

போலந்து போன்ற நாடுகளில் உக்ரைன் நாட்டிலுள்ள பாடத்திட்டமே மருத்துவப் படிப்பில் நடைபெறுவதால் சில மாணவர்கள் போலந்து போன்ற நாடுகளில் கல்வி கற்கவும் விரும்புகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு மூலமாக நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மேலும் உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர மத்திய அரசு மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *