
மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகருக்கு நேற்று ஒரு அரசு பேருந்து வந்தது. விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு வழியாக அந்த பேருந்து வந்தது. அங்கிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பேருந்தின் பின்புற படிக்கட்டு படி திடீரென உடைந்து கீழே விழுந்தது. படிகளில் பயணிகள் நின்றுகொண்டு இருந்த நிலையில் அதிஷ்ட வசமாக பக்கவாட்டு கம்பியை பிடித்துக்கொண்டு மேலே ஏறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் உடைந்து விழுந்த படியை தூக்கி வந்தனர். போக்குவரத்து கழக நிர்வாகம் தினமும் பஸ்களை பராமரிப்பதாக கூறினாலும் இம்மாதிரியான சேதமடைந்த நிலையில் உள்ள பஸ்களை வழித்தடங்களில் அனுப்பாமல் அந்த பஸ்களை முழுமையாக பழுது நீக்க வேண்டியது அவசியமாகும். தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இதே நிலைதான் இருந்து வந்துள்ளது. இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.