அன்பு ஜோதி ஆதரவற்றோர் ஆசிரம வழக்கில் கைதான 9 பேரில் 3 பேருக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு!

விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூரில், ‘நல்ல சமேரியர் சாரிட்டபிள் டிரஸ்ட்’ சார்பில் அனுமதியின்றி இயங்கி வந்த காப்பகத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.இதையடுத்து, நடந்த விசாரணையை அடுத்து, காப்பகத்தின் நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா, மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 6 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் ஜூபின்பேபி, மரியா, பிஜூமோன், சதீஷ், அய்யப்பன், கோபிநாத் ஆகிய 6 பேரை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றனர். பிறகு அவர்கள் 6 பேரையும், விழுப்புரம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் கைதான, காப்பக மேலாளர் பிஜூமோன், காப்பக பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத் ஆகிய 3 பேரின், நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து 3 பேரும், விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, காப்பக மேலாளர் பிஜூமோன் உட்பட 3 பேருக்கும், ஏப்ரல் 11ம் தேதி வரை 14 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *